தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

அறிவிப்புடன் நின்றுவிட்ட பெண்களுக்கான தங்கும் விடுதி..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்தும், கடந்த நான்கு வருடங்களாக இடத்தை தேர்வு செய்வதில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்தும், கடந்த நான்கு வருடங்களாக இடத்தை தேர்வு செய்வதில் சமூக நலத் துறை அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் தங்கும் விடுதி அமைக்கும் பணி வெறும் அறிவிப்பாகவே உள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகன உற்பத்தி தொழிற்சாலைகளும், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், இத்தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் தொழிற்சாலைகளும் ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. 
அதேபோல், செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகர், சிங்கபெருமாள்கோயில், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 
சோழங்கநல்லூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தாம்பரம் மெப்ஸ் பகுதியில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இந்த வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதுபோல் தொழிற்சாலைகள் வழங்கும் அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடங்களிலும், தனியார் விடுதிகளிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர். தனியார் வீடுகள், சில தனியார் விடுதிகளில் தங்கும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்.
தொழிற்சாலைகள் வழங்கும் தங்கும் விடுதிகள் சிலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஒரே அறையில் அதிகப்படியான பெண் தொழிலாளர்களும் தங்குவதால் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, சோழங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்படும் என கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. 
இதற்காக மூன்று தங்கும் விடுதிகளுக்கும் தலா ரூ. 1.01 கோடி என மொத்தம் ரூ. 3.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக சமூகநலத் துறை அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்யமால் மெத்தனமாக இருந்து வருவதால் கடந்த நான்கு ஆண்டுகளாக, வேலை செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கும் பணி அறிவிப்பாகவே இருந்து வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, சோழங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் பெண் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டும் என 110 விதியின் கீழ், கடந்த 2014-ஆம் ஆண்டு அரசு அறிவிப்பு செய்தது. இதற்காக ரூ. 303 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில், தங்கும் விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு செய்து கொடுக்கும் படி, சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக சமூகநலத் துறை அதிகாரிகள் இடம் தேர்வு செய்து கொடுக்காததால் அப்பணியை நிறுத்தி வைத்துள்ளோம் என்றார். 
எனவே வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தங்கும் விடுதிகள் கட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் உடனடியாக இடத்தைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.