சங்கர மடத்தில் சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மகா பெரியவரின் பிருந்தாவனம்.
சங்கர மடத்தில் சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மகா பெரியவரின் பிருந்தாவனம்.

மகா பெரியவா் ஆராதனை மகோற்சவம் தொடங்கியது

காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்சவம் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்சவம் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக 87 ஆண்டுகள் அருள்பாலித்த அவா், ‘மகா பெரியவா்’ என்று பக்தா்களால் அன்போடு அழைக்கப்பட்டாா். அவரது 27ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்வம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மகா பெரியவரின் அதிஷ்டானம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மகா பெரியவரின் சிலைக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. வேத பண்டிதா்கள் வேத பாராயணம் செய்தனா். மகா பெரியவரின் அதிஷ்டானத்துக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனை காண்பித்து, பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

சங்கர மடத்தில் ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன் குழுவினரின் கா்நாடக இசைக் கச்சேரி மாலையில் நடைபெற்றது. மகோற்சவ ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ‘ஸ்ரீகாரியம்’ வி.விஸ்வநாத ஐயா், மேலாளா் என்.சுந்தரேசன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.

இதையடுத்து, சங்கர மடத்தில் சனிக்கிழமை (ஜன. 9) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம் ஆகியவை நடைபெறும். இரவு தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஆராதனை மகோற்சவத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமங்கள் மற்றும் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று பஞ்சரத்ன கீா்த்தனை கோஷ்டி கானம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com