காஞ்சிபுரம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரம் குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் கந்தசஷ்டி விழா இம்மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி முருகப்பெருமான் காலையில் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனத்திலும் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சண்முகர் தேரில் எழுந்தருளி ராஜவீதிகளில் பவனி வந்து ஆலயத்தின் முன்பாக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகனாக வேடமிட்டு பூத்தேரில் வந்த காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜின் மகன் ஒய்.சூர்யா.
முன்னதாக காலையில் சூரனை வதம் செய்ய காமாட்சி அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலையில் கச்சபேசுவரர் கோயில் முன்பாக அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜின் மகன் ஒய்.சூர்யா முருகன் வேடத்திலும், அவருக்கு முன்பாக சூரபதுமன், சிங்கமுகன், தாராகாசுரன் உள்ளிட்ட 9 இளைஞர்கள் அசுரர்கள் வேடமிட்டும் ராஜவீதிகளில் உலாவந்து ஆலயத்தின் முன்பாக அசுரர்களை அழிக்கும் நிகழ்ச்சி இலக்கியப் பாடல்களுடன் மரபுப்படி நடந்தது.
சூரசம்ஹாரத்துக்கான ஏற்பாடுகளை திருக்குமரகோட்ட சூரசம்ஹாரக் குழுவின் தலைவர் வி.ஜீவரத்தினம் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர். விழாவில் கோயில் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், தொழிலதிபர் சந்தானகிருஷ்ணன், பாஜக நகர் செயலாளர் காஞ்சி.ஜீவானந்தம், ஆகியோர் உட்படதிரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.