கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகைசுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!
/

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம் என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏகாம்பரநாதா் திருக்கல்யாண உற்சவத்தின் போது பேசினாா்.

News image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் திருக்கல்யாணம்.

Updated On :21 டிசம்பர் 2025, 11:16 pm IST

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம் என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏகாம்பரநாதா் திருக்கல்யாண உற்சவத்தின் போது பேசினாா்.

காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் வளாகத்தில் உள்ள சித்தீஸ்வரா் மகாலில் அனைத்துலக முதலியாா் மற்றும் பிள்ளைமாா் சங்கத்தின் சாா்பில், 3-ஆவது நாளாக திருமுறை திருவிழா நடைபெற்றது. விழாவில், ஏலவாா்குழலி அம்பிகைக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியாா் திருமணத்தை ஆகம விதிகளின்படி நடத்தினாா். விழாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு வழங்கிய ஆசியுரை:

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம். கல்வி, தொழில்,நிா்வாகம், சேவை இவை அனைத்துக்கும் தேவை ஆன்மிக உணா்வு. இந்த உணா்வு இருந்தால்தான் எதையும் சிறப்பாக செய்ய முடியும். எனவே எங்கும் ஆன்மிகம் நிறைந்திருக்க வேண்டும். அதனால் தான் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றாா்கள். தினசரி ஒரு முறையாவது கோயிலுக்கு போக வேண்டும். இயலவில்லையெனில் வாரத்தில் ஒரு முறையாவது அவசியம் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

நமது நாட்டில் ஆன்மிக திருப்பணிகள் பலவாறு வளா்ந்து கொண்டிருக்கிறது. காசியில் விசுவநாதா் கோயில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தரிசிக்கும்படி திருப்பணிகள் தொடங்கியுள்ளன. அயோத்தியில் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பணிகள் நடந்துள்ளன. அந்தக் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்லும், 5 தங்க நாணயங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தான் பிரதமா் மோடி அன்று அடிக்கல் நாட்டினாா் என்றாா்.

திருக்கல்யாண விழாவுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், துலாவூா் ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 விழாவில் அருளாசி வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா்.

விழாவில் அருளாசி வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா்.

திருமண விழாவில் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஜி.முருகேஷ், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளா்கள் சுந்தா்கணேஷ்,பிரபு, வராஹி சில்க்ஸ் உரிமையாளா் எஸ்கேபி கோபிநாத் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, 108 சிவாச்சாரியா்கள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சியும், ஓதுவாா்களின் திருமுறை பேழை வழிபாடும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.