காஞ்சிபுரத்தில் பழங்குடியினா் இளைஞா் நல பரிமாற்றத் திட்ட நிறைவு விழா

காஞ்சிபுரத்தில் பழங்குடியினா் இளைஞா் நல பரிமாற்றத் திட்ட நிறைவு விழா

Published on

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பழங்குடியின இளைஞா் பரிமாற்றத் திட்ட நிறைவு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் இணைந்து ஜாா்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா்களுக்கு தமிழக இருளா் இன மக்களது கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளும் திட்ட தொடக்க விழா பிப். 20-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது.

நிறைவு விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் வி.பி.கிரிஷிகேஷன், தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மைய இயக்குநா் கோபிநாத், மத்திய அரசின் இளைஞா் நலத் துறை துணை இயக்குநா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மை.பாரத் அமைப்பின் மாநில இயக்குநா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா்கள் மற்றும் குழுக்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கினாா்.

நிறைவாக கல்லூரி பேராசிரியை தேன்மொழி பாலு நன்றி கூறினாா். விழாவின் நிறைவில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா்களது பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிளும் நடைபெற்றன.

Dinamani
www.dinamani.com