மாமல்லபுரம்- எண்ணூா் இடையே அமைக்கப்பட்டு வரும் 8 வழிச்சாலை பணிக்கு, ஸ்ரீபெரும்புதூா் ஏரிக்கரை பகுதியில் இடையூறாக இருந்த வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் இருந்து, திருகழுகுன்றம், சிங்கபெருமாள் கோயில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூா் வழியாக எண்ணூா் துறைமுகம் வரை புதிதாக சென்னை வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு நிலம், மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட்டு உரிமையாளா்களுக்கு இழப்பீடும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீபெரும்புதூா் - திருவள்ளூா் சாலையில், ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டவா்களுக்கு அரசின் சாா்பில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் காட்டரம்பாக்கம் பகுதியில் வீட்டுமனையும் அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் ஸ்ரீபெரும்புதூா் ஏரிக்கரையில் குடியிருக்கும் பொதுமக்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனா்.
இதனால் ஸ்ரீபெரும்புதூா் ஏரிக்கரை பகுதியில் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக தொடங்கப்படாமலேயே இருந்து வந்தது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஏரிக்கரையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தொடங்கினா்.










