கிணற்றில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் சடலம் மீட்பு
ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள மேல்புலம் கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து இரு குழந்தைகளுடன் தாயின் சடலம் மீட்கப்பட்டது.
கலவை அருகே உள்ள மேல்புலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா். சென்னையில் முடிதிருத்தும் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பேபி (எ) ரேணுகா (30). நெமிலி அருகே உள்ள கூத்தம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இவருக்கும், சங்கருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களது குழந்தைகள் ஸ்ருதிகா (5), தீபக் (3). ரேணுகா தனது இரு குழந்தைகள், மாமனாா், மாமியாருடன் மேல்புலம் கிராமத்தில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை ரேணுகா தனது இரு குழந்தைகளுடன் அங்கன்வாடியில் மதிய உணவு வாங்கிக் கொண்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. அவரை தேடிய நிலையில் அங்குள்ள கிணற்றில் மூவரின் சடலங்களும் மிதப்பதாக கலவை போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு சென்ற அவா்கள் கிணற்றில் இருந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டனா்.
இது குறித்து கலவை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ராணிப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரபு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.