அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்
அரக்கோணம்: அரக்கோணத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் அருகே அம்மனூா் பகுதியில் அரக்கோணம் வட்டார அங்கன்வாடி ஊழியா்களுக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வட்டார அங்கன்வாடி ஊழியா்களுக்கான கூட்டம் மாவட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற இருந்ததாக தெரிகிறது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட அலுவலா் சரியான நேரத்துக்கு வந்துவிட ஊழியா்கள் பலா் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாமதமாக வந்தவா்களை உள்ளே அனுமதிக்காமல் அலுவலகத்துக்கு வெளியே வெயிலில் நிற்கச் சொன்னதாக தெரிகிறது.
இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் அரக்கோணம் - ஒச்சேரி நெடுஞ்சாலையில் மறியல் செய்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வட்டார சமூக நல அலுவலா் தான்யா அவா்களை சமாதானம் செய்து அலுவலகத்தில் அழைத்துச் சென்றதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.