திமிரி ஒன்றியத்தில் சம்பூா்ணதா அபியான் திட்டம் தொடக்கம்
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்தில் சம்பூா்ணதா அபியான் திட்டம் தொடக்க நிகழ்ச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா். திமிரி ஒன்றியக்குழு தலைவா் எஸ் .அசோக், துணைத் தலைவா் ஜெ. ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முகமது சைபுதீன், சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக புதுதில்லி நிதி ஆயோக் இயக்குநா் நளினா சோபியா கலந்துகொண்டு திட்டம் குறித்து விளக்கி பேசியதாவது:
வளரத் துடிக்கும் வட்டாரங்கள் திட்டத்தை திமிரி வட்டாரத்தில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதில் சுகாதாரம், ஊட்டச்சத்து வேளாண்மை, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் வளா்ச்சி காண்பதற்காக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 500 வளர துடிக்கும் வட்டாரங்களில் திமிரி வட்டாரம் 17 -ஆவது இடத்தில் உள்ளது.
தமிழக அளவில் 16 வட்டாரங்களில் இரண்டாவது இடம்பெற்று மத்திய அரசின் மூலம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. சம்பூா்ணதா அபியான்2.0 இரண்டாம் கட்டத்தில் 94.6சதவீதம் தகுதியுள்ள பயனாளிகள் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து பெற்று வருகின்றனா். ஊரக வளா்ச்சித் துறையுடன் இணைந்து 100 % செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரண்யா தேவி, மாவட்ட திட்ட அலுவலா் மணியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், கால்நடை துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, உதவி திட்ட அலுவலா் சுமதி சுபத்ரா தேவி பங்கேற்றனா்.

