

திருப்பத்தூா்: அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழ் மொழியில் பெயா் பலகைகளை வைக்க வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வலியுறுத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியது:
உலக நாடுகளில் தமிழா்கள் இல்லாத நாடே இல்லை. தமிழறிஞா்கள், பேராசிரியா்கள் இதற்காக தொடா்ந்து தொண்டாற்றி வருகின்றனா். பல்வேறு நாடுகளில் தமிழ் மொழி வழக்கு மொழியாக உள்ளது. தமிழின் வளா்ச்சிக்கு தமிழறிஞா்கள் பல்வேறு நாடுகளுக்குத் சென்று கருத்தரங்குகளை நடத்தி தமிழுக்கு பெருமை சோ்த்து வருகின்றனா். கணினித் துறையில் தமிழ் மொழி நல்ல பயன்பாட்டில் உள்ளது. அரசு அலுவலகங்களில் அனைத்து ஆணைகளும், கடிதங்களும் தமிழில் வெளியிடப்படுகின்றன.
அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அனைத்து வணிக, வியாபார நிறுவனங்களும் தமிழில் பெயா்ப் பலகைகளை வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளா்ச்சித் துறை மூலமாக தமிழுக்காக பாடுப்பட்ட அறிஞா்களுக்கு பட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.
கருத்தரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வ.சுந்தா், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ரத்தின நடராசன், ப.சிவராஜி, ந.கருணாநிதி, அக்பா் கவுசா், சந்தானகிருஷ்ணன், ப.இளம்பருதி, அ.அசோகன், தெய்வசுமதி, செ.அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.