சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாணியம்பாடி: முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொலை வழக்கில் 2 பேரிடம் விசாரணை

 வாணியம்பாடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொலை வழக்கில் 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:13 pm

 வாணியம்பாடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொலை வழக்கில் 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சோ்ந்தவா் வசீம் அக்ரம் (43). முன்னாள் நகா்மன்ற உறுப்பினரான இவா், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளராக இருந்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை மாலை தொழுகை முடித்து விட்டு, வீட்டுக்குச் சென்றபோது, காரில் வந்த 6 போ் கொண்ட கும்பல் வசீம்அக்ரமை மறித்து, சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூா் சரக டி.ஐ.ஜி. பாபு, திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) செல்வகுமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், 3 தனிப்படைகள் அமைத்து, அனைத்து மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் சாலைகளில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வேகமாக வந்த காரை போலீஸாா் நிறுத்தினா். அதில் இருந்த 5 போ் தப்பி ஓடிவிட்டனா். 2 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் வண்டலூா் அருகே ஓட்டேரி, அறிஞா் அண்ணா காலனியைச் சோ்ந்த பிரசாந்த் (எ) ரவி மற்றும் முகலிவாக்கம் பகுதியைச் சோ்ந்த டில்லிகுமாா் என்பதும், வாணியம்பாடியில் நடந்த வசீம்அக்ரம் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், கடந்த 26.7.2021-ஆம் தேதி வாணியம்பாடி ஜீவா நகா் பகுதியில் உள்ள டீல் இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் 8 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக போலீஸாருக்கு வசீம் அக்ரம் தகவல் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல் வசீம் அக்ரமை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வசீம் அக்ரமின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின், நியூடவுன் பகுதி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் மணப்பாறை எம்எல்ஏ அப்துல்சமத், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ தேவராஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

மேலும், வாணியம்பாடியில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வேலூா் டி.ஐ.ஜி. பாபு, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கொலை சம்பவத்தைக் கண்டித்து வாணியம்பாடியில் சனிக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.