ஆம்பூா் அருகே தானிய களத்தை சமூக விரோதிகள் இரவோடு இரவாக சேதப்படுத்தியுள்ளனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் அமைந்துள்ளது பைரப்பள்ளி கிராமம். இங்கிருந்து ஊட்டல் தேவஸ்தானம் செல்லும் சாலையில் கலால்மேடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் ரூ. 7 லட்சத்தில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக தானியங்களை உலா்த்துவதற்காக களம் அமைக்கப்பட்டது.
சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம், கம்பு, நிலக்கடலை போன்ற தானியங்களை அறுவடை செய்யவும், சுத்தம் செய்யவும், அறுவடை செய்யப்பட்ட தானியங்களை உலர வைத்து, மூட்டைகளில் கட்டி எடுத்துச் செல்லவும் பயன்படுத்தி வந்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவோடு இரவாக சமூக விரோதிகள் சிலா், தானிய களத்தை முழுவதுமாக சேதப்படுத்தி உள்ளனா். அங்கு தானிய களம் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு சேதப்படுத்தி தானிய களம் மேடையை அப்புறப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், அதே இடத்தில் மீண்டும் தானிய களம் அமைத்து விவசாயிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமெனவும், தானிய களத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.