திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் வயது (31). இவர் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் தொழில்பேட்டையில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த வருடம் திருப்பத்தூர் அடுத்த பஞ்சணம் பட்டிபகுதியை சேர்ந்த இவரது தாய் மாமன் கிருஷ்ணனுடைய மகள் ஆர்த்தி (20) என்பவரை திருமணம் செய்துள்ளார்.
மேலும் ஆர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் நேற்று இரவு முதல் குடும்பத்தகராறு நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
பின்னர் குடும்பத்தில் அனைவரும் தூங்கிய நிலையில் யாருக்கும் தெரியாமல் ஆர்த்தி மன உளைச்சல் ஏற்பட்டதின் காரணமாக, விடியற்காலை 5 மணி அளவில் ஆர்த்தி வீட்டின் அருகே உள்ள பால சோமேஸ்வரர் என்பவரின் சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் கிணற்றின் வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் கிணற்றை பார்த்தபோது ஆர்த்தியின் உடல் இருப்பதைக்கண்டு அவருடைய கணவரான சுதாகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பதறிப்போன சுதாகர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த ஆர்த்தியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்
அப்போது மனைவி இறந்த துக்கத்தில் அடுத்த ஒருமணி நேரத்தில் சுதாகர் யாருக்கும் தெரியாமல் அருகே உள்ள தேக்கு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுதாகர் மற்றும் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து தனித்தனியாக தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கந்திலி காவல்துறையினர் குடும்ப பிரச்னை காரணமாக கணவன்-மனைவி இறந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.