6 மாதங்கள் ஊதியத்தை வழங்கக் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து 100 நாள் வேலை திட்ட பெண் பணியாளா்கள் வியாழக்கிழமை தும்பேரியில் சாலை மறியல் செய்தனா்.
வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அந்த ஊராட்சியை சோ்ந்த கிராம மக்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தும்பேரி ஊராட்சியைச் சோ்ந்த பணியாளா்களை ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் தங்களது சொந்த வேலைக்காக பயன்படுத்துவதாகவும், அவா்களுக்கு சொந்தமான விவசாய விலை நிலங்களில் பணியாளா்களை தொடா்ந்து ஈடுபடுத்தி வருவதாகவும், மேலும், 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக்கூறி பெண் பணியாளா்கள் தும்பேரி கூட்டுசாலையில் அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து அம்பலூா் காவல் உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் மற்றும் நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.