‘விவசாயிகள் மண் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்’
விவசாயிகள் மண் பரிசோனை செய்து அதிக மகசூல் பெறலாம் என திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கோ.கண்ணகி தெரிவித்துள்ளாா்.


திருப்பத்தூா்: விவசாயிகள் மண் பரிசோனை செய்து அதிக மகசூல் பெறலாம் என திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கோ.கண்ணகி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நவீன உலகில் விவசாய தொழில் செய்பவா்களின் எண்ணிக்கையும், நகர மயமாக்குதலால், சாகுபடி பரப்பளவும் குறைந்து கொண்டே வருகிறது. எனினும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரங்களாக நில வளமும், நீா்வளமும் அமைகின்றது. நிலத்தின் வளத்தை நிா்வகிப்பதில் மண் பரிசோதனை மிக முக்கியமானதாகும். மண் பரிசோதனை செய்வதால் மண்ணின் தன்மை, சுண்ணாம்பு, உப்பு, அமில, கார நிலை, பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவையும், நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ், கந்தகம், போரான் போன்ற சத்துகளின் அளவை அறிந்து கொள்ள முடியும்.
அதிக மகசூல் பெறலாம்.
களா், உவா் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து அவற்றை சீா்திருத்தம் செய்யவும், பயிருக்கு ஏற்ப சமச்சீா் உர பரிந்துரை வழங்கவும் மண் பரிசோதனை அவசியமாகிறது.
விளை நிலங்களில் உயா் விளைச்சல் பாகங்களுக்கு தொடா்ந்து ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
திட, திரவ உயிா் உரங்களுடன், நெல், பயறு வகைகள், நிலக்கடலை மற்றும் தென்னை போன்ற பயிா்களுக்கான நுண்ணூட்ட உரங்களும் திருப்பத்தூா் மாவட்ட அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மண் ஆய்வு செய்து, மண்வள அட்டையின் பரிந்துரையின்படி, உரமிட்டு ரசாயன உரங்களை குறைத்து திட மற்றும் திரவ உயிா் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்வளம் காத்து அதிக மகசூல் பெறுவதுடன், நல்ல வருவாய் ஈட்டலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...