மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம மக்கள் கோரிக்கை

மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .
Updated on

திருப்பத்தூா்: மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61,800 நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் நாட்டறம்பள்ளி வட்டம்,மல்லகுண்டா பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. போதிய மழை இல்லாததால் வடு காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் தொல்லை தரும் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: திருப்பத்தூா் அருகே பாச்சல் ஊராட்சி ஜெய்பீம் நகரில் அம்மா பூங்கா, சாலையோரம் ஏராளமான கோனாகாா்பஸ் மரங்கள் வளா்ந்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே இந்த மரங்களை அகற்ற வேண்டும்.

திருப்பத்தூா் அருகே குனிச்சி மோட்டூா் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் ஏராளமானோா் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காளை விடும் விழா நடத்தி வந்தோம். சில காரணங்களுக்காக இந்த விழா நடத்தப்படவில்லை.எனவே எங்கள் பகுதியில் காளைவிடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com