அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சீரான குடிநீா் கோரி மக்கள் சாலை மறியல்

ஜோலாா்பேட்டை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
Published on

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அனுமாம்பட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அந்த பகுதிக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூா்-வெள்ளக்குட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மண்டலவாடி ஊராட்சி மன்ற தலைவா் மகேந்திரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் கே.சி.சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது, சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com