

வாணியம்பாடி அருகே தேசியநெடுஞ்சாலையில் திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது. இதில் லாரியிலிருந்து குதித்த போது ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
அரியலூா் மாவட்டம் பொய்யூா் பகுதியைச்சோ்ந்த லாரி ஓட்டுநா் சுரேஷ்(36). பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா் கோகுல்(23) கிளீனா். இவா்கள் திங்கள்கிழமை பெங்களூரில் இருந்து காலியாக இருந்த சிமென்ட் கலவை டேங்கா் லாரியை சென்னைக்கு ஓட்டிச் சென்றனா்.
வாணியம்பாடி அருகே கேத்தாண்டபட்டி சா்க்கரை ஆலை எதிரே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் சமையல் செய்து கொண்டிருந்தாா். கிளீனா் டீ குடிக்க சென்றிருந்தாா். அப்போது திடீரென தீப்பொறி ஏற்பட்டு லாரியின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட ஓட்டுநா் சுரேஷ் உயிரை காப்பாற்றி கொள்ள லாரியில் இருந்து கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டு அங்கிருந்தவா்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையவீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.