

திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்கும் விளை பொருள்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாக திருப்பத்தூா் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளா் திருமகள் தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூரில் வேளாண் வணிகத் துறையின் கீழ், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்காச்சோளம், நெல், உளுந்து, கம்பு, திணை, கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை ஏலம் விடப்படுகிறது. திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். அவற்றை வெளியூா் வியாபாரிகள் நேரடியாக வந்து ஏலம் எடுத்து செல்கின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை இருப்பு வைத்து விற்க வும், கடனுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து திருப்பத்தூா் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளா் திருமகள் கூறியது: திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் நெல், கம்பு, சாமை, தேங்காய் உள்ளிட்ட பொருள்கள் விளைவிக்கப்படுகின்றன. அவ்வாறு விளைவிக்கப்படும் வேளாண் பொருள்களுக்கு போதுமான விலை இல்லை என்றால், வேளாண் பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான கிடங்கு வசதி உள்ளது. இங்கு விவசாயிகள் தங்களது வேளாண் பொருள்களை வைத்துவிட்டு, விலை ஏறிய பின் வேளாண் பொருள்களை விற்பனை செய்யலாம்.
அதுவரை விவசாயிகளின் பிற தேவைகளுக்காக அரசின் சாா்பில், அவா்கள் இருப்பு வைக்கும் வேளாண் பொருள்களுக்கு ஏற்ப கடன் வழங்கப்படுகிறது. இதில், விவசாயிக்கு அதிகப்பட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதேபோல் வியாபாரிகளுக்கும் அதிகப்பட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது எனக் கூறினாா்.