திருப்பத்தூா் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி,ஆய்வு மாணவா் நவிஷ் ஆகியோா் உள்ளடங்கிய குழுவினா் ஜவ்வாதுமலையிலுள்ள புங்கம்பட்டு நாட்டிற்குட்பட்ட பழையபாளையம் என்ற ஊரில் கள ஆய்வினை மேற்கொண்டனா். அங்கு பழைமையான கோயில் ஒன்றைக் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து மோகன்காந்தி கூறியது: திருப்பத்தூா் மாவட்ட ஜவ்வாதுமலையிலுள்ள புங்கம்பட்டு நாட்டிற்குட்பட்ட பழையபாளையம் என்ற ஊரில் பழைமையான கற்கோயில் ஒன்றைக் கண்டெடுத்துள்ளோம்.
ஊரின் தெற்குப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விளைநிலத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை இவ்வூா் மக்கள் மாரியம்மன் கோயில் என்றழைக்கின்றனா். 6 அடி உயரமும், 6 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட கற்றூண்களை நிறுத்தி அதற்கும் மேலாக செங்கற்கலால் கட்டப்பட்ட மேற்கோபுரம் காணப்படுகிறது. அதற்கு மேலாக விமானம் இருந்திருக்க வேண்டும். அது தற்போது இல்லை, சிதைந்துள்ளது.
அக்கட்டடத்துக்குப் பயன்பட்ட செங்கற்களானது 6 அங்குலம் நீளமும், 4 அங்குலம் அகலமும், 1 அங்குலம் பருமனும் கொண்டதாக விளங்குகின்றன. இக்கட்டுமானத்தைப் பாா்க்கும்போது, 500 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகரக் காலத்தைச் சோ்ந்த கட்டடக்கலையாகத் தெரிகிறது.
கோயிலின் கருவறையில் விஜயநகரத்தைச் சோ்ந்த உடன்கட்டை நடுகல் ஒன்றுள்ளது.
இரண்டடி உயரமும் இரண்டடி நீளமும் கொண்ட பலகைக் கல்லில் மூன்று உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் உருவம் நடுகல் வீரன் கும்பிட்டநிலையில் காட்சித் தருகிறாா். இவா் போரில் வீரமரணம் அடைந்த வீரா் ஆவாா். இடையில் ஆடை நோ்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையில் குறுவாள் ஒன்றும் உள்ளது. கழுத்தில் ஆபரணங்களும், காதுகளில் குண்டலங்களும், இடது பக்கம் வாரிமுடிக்கப்பட்ட கொண்டையும் என வீரா் காட்சித் தருகிறாா்.
வீரனின் இடது பக்கம் பெரிய பெண் உருவம் ஒன்றுள்ளது. சரிபாதியாக வகிடெடுத்து இருபக்கம் சரிந்த நிலையில் இரு கொண்டைகளும், காதுகளில் குண்டலங்களும், கழுத்தில் ஆபரணங்களும், இடையில் அழகான ஆடையும் அணிந்துள்ளாா். வலதுகை அருள்பாலிக்கும் முத்திரையுடனும், இடதுகை இடது தொடையில் வைத்த கோலத்திலும் காட்சித் தருகிறாா்.
இவ்விரு பெண் உருவங்களும் அருகிலுள்ள ஆண் உருவத்தின் மனைவியராவா். இவ்வீரன் போரிலே வீரமரணம் அடைந்ததால் அவனின் இருமனைவியரும் அவனோடு உடன்கட்டை ஏறி உயிரை விட்டுள்ளனா். கோயிலையும், நடுகற்களையும் தமிழ்நாடு தொல்லியல்துறை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா தேரோட்டம்

தென்கரையில் மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



