நீர்ப்பாசனம் தடையில்லாமல் நடைபெற சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சூரிய ஒளியால் இயங்கும் சோலார் மோட்டார் விவசாயிகளுக்கு 80 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வேளாண் துணை இயக்குனர் பாபு தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் உழவர் பெருவிழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டக் கவுன்சிலர் ஸ்ரீதர், துணைத் தலைவர் எபினேசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் உதவி அலுவலர் சிவசங்கரி வரவேற்றார்.
வேளாண் உதவி இயக்குனர் சண்முகையா செம்மை நெல் சாகுபடி குறித்தும், தோட்டக்கலை இயக்குனர் ராமலிங்கம் தோட்டக்கலை துறை சார்பாக வழங்கப்படும் மானியங்கள் குறித்தும்,
துணை வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் உயிர் உரங்கள் குறித்தும், வேளாண் பொறியியல் துறை பொறியாளர் துரைசாமி மானிய விலையில் வழங்கப்படும் விவசாய இயந்திரங்கள் குறித்தும், வேளாண் விற்பனை மற்றும் வணிக பிரிவு அலுவலர் அருள்முருகன் விளைபொருட்களை சந்தை படுத்துதல் குறித்தும் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் பாபு பேசியது:
தற்போதைய சூழலில் விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மின்வெட்டைச் சமாளிக்கும் வகையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரிய ஒளியால் இயங்கும் மோட்டார்களை வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சோலார் மோட்டார் 80 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் இல்லாத நிலையிலும் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாரைப் பயன்படுத்தி பம்பு செட்டுகள் மூலம் வயல்களுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த முடியும்.
கம்பு, கேழ்வரகு, சாமம், வரகு, திணை போன்ற சிறு தானியங்களைப் பயிரிட விவசாயிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த அதிக அளவில் மானியங்களும், தரமான விதைகளும் வழங்கப்படும் என்றார்.
விழாவில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கையேடு, மானிய விலையிலான மினி டிராக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









