திருவள்ளூர் அருகே நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் , அதிகத்தூர் ஊராட்சியைச் சேர்ந் த நரிக்குறவர்கள் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் சிறு குடியிருப்புகளை அமைத்து வசித்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை இக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து குடிசைகளை அமைத்துள்ளனர். அத்துடன், இரவு நேரங்களில் மது விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதால், எங்களுக்கு குடியிருக்க அச்சமாக உள்ளது.
அதனால், எங்கள் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடமும், திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்செல்வனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டுத் தரப்படும் என வட்டாட்சியர் தமிழ்செல்வன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.