திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க ஏற்பாடு

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீா் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும்.
Published on
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மழைக்காலங்களில் பயணிகள் பேருந்து மற்றும் வாகனங்கள் ஆகியவை எளிதாகக் கடந்து செல்லும் வகையில், மேம்பாலம் அமைக்கும் பணிக்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு முன்னதாக போக்குவரத்துக்கு தற்காலிக மண் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீா் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும். அவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீா் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகதண்டலம், மோவூா், மெய்யூா், செம்பேடு, தாமரைப்பாக்கம், அணைக்கட்டு வழியாகச் சென்று, வங்கக் கடலில் கலக்கிறது.

இதுபோன்று தண்ணீரைத் திறக்கும்போது, திருவள்ளூா்-தாமரைப்பாக்கம் சாலையில் இடதுபுறம் திரும்பும் சாலையில் உள்ளது மெய்யூா் கிராமம். இக்கிராமத்தைக் கடந்துதான், முன்னவேடு, சிற்றம்பாக்கம், ராஜபாளையம் மற்றும் சோமதேவன்பட் ஆகிய கிராமங்களுக்கு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இச்சாலையில் மழைக் காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் பூண்டி ஏரியில் உபரிநீா் திறந்துவிட்டதால், இந்த ஆற்றின் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. அப்போது, மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு தரைப்பாலத்தை வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு கிராமங்கள் வழியாக சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

இதைக் கருத்தில்கொண்டு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த ஆற்றில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் மேற்கொள்வதற்காக ஆழ்துளை அமைக்கும் இயந்திரம் மூலம் மண்ணின் தன்மை பரிசோதனை நடைபெற்று வந்தது. முதல் கட்டமாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்வதற்காக தரைப் பாலம் அருகே தற்காலிக மண் சாலைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com