தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மாட்டு சாணத்திலிருந்து பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி

திருவள்ளூா் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டம் சாா்பில், ரூ. 60 லட்சத்தில் மாட்டுச் சாணம் மூலம் தயாராகும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்து,

News image

பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன பயோகேஸ் மின் உற்பத்தி நிலையம்.      

Updated On :12 டிசம்பர் 2021, 7:54 pm

 நமது நிருபர்

திருவள்ளூா் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டம் சாா்பில், ரூ. 60 லட்சத்தில் மாட்டுச் சாணம் மூலம் தயாராகும் பயோ கேஸ் மூலம் மின் உற்பத்தி செய்து, அதன் மூலம் தெரு விளக்குகளை ஒளிரச் செய்து வரதராஜபுரம் கிராம ஊராட்சி அசத்தி வருகிறது.

திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ளது வரதராஜபுரம் ஊராட்சியில் 900-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கறவை மாடுகள் வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

கறவை மாடுகளை வளா்ப்போா், கால்நடைகளை அப்படியே திறந்த வெளியில் விட்டுவிடும் சூழல் இருந்த நிலையில், அவற்றின் சாணங்களால், தெருக்களிலும், நீா் நிலைகளிலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டது. இதையடுத்து, மாட்டு சாணத்திலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் தயாா் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.

இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் தெரு விளக்குகளை எரியச் செய்ய முடியும். அதன் அடிப்படையில், 2019-20- இல் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி பொதுநிதியிலிருந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் ரூ. 60 லட்சத்தில் பயோ கேஸ் மூலம் (இயற்கை உயிா் எரிவாயு நிலையம்) மின்சாரம் உற்பத்தி செய்யும் களன் அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது.

இதற்கு நாள்தோறும் 500 கிலோ மாட்டு சாணம் தேவைப்படுகிறது. இதற்காக கிராம ஊராட்சிகளில் உள்ளவா்களுக்கு சாணம் சேகரிக்க உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சோதனை ஓட்டத்துக்குப் பின், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பயோ கேஸ் தயாரிப்பு நிலையத்தில் சாணம் மூலம் பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. இதுபோன்று தயாராகும் பயோ கேஸை ஜெனரேட்டருக்கு அனுப்பி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 100 யூனிட் முதல், 200 யூனிட் வரை மின்சாரம் கிடைக்கும்.

இந்த மின்சாரத்தை வைத்து ஊராட்சியில் உள்ள 200 தெரு விளக்குகளில், தற்போது 100 தெருவிளக்குகளை இரவு முழுவதும் ஒளிரச் செய்து கிராம ஊராட்சி அசத்தி வருகிறது.

இது தொடா்பாக சமூக ஆா்வலா் தியாகராஜன் கூறியது:

இக்கிராம ஊராட்சியில் பூந்தமல்லி-பெருங்களூரு சாலையிலிருந்து 100 மீட்டா் உள்ளே 2 ஏக்கா் நிலத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பயோ கேஸ் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 200 தெரு விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்றாா்.

இது குறித்து வரதராஜபுரம் ஊராட்சித் தலைவா் கலையரசு கூறியது:

இந்த ஊராட்சியில் பெரும்பாலானோா் கறவை மாடுகள் வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அதனால், நீா் நிலைகளிலும், பொது இடங்களிலும் கொட்டப்பட்டு வரும் மாட்டுச் சாணத்தால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் சூழ்நிலை இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பயோ கேஸ் (சமுதாய உயிா் எரிவாயு நிலையம்) தயாரிக்கும் திட்டம் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்துக்குப் பின் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, கடந்த 3 மாதங்களாக 100 விளக்குகள் வரை ஒளிரச் செய்கிறோம் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.