/

நீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி ஏரியிலிருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

பூண்டி ஏரிக்கான நீர் வரத்து 42 கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை 3 மணி நிலவரப்படி, நொடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு

News image
பூண்டி ஏரி.
Updated On :28 ஜனவரி 2024, 4:36 am

DIN

பூண்டி ஏரிக்கான நீர் வரத்து 42 கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை 3 மணி நிலவரப்படி, நொடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை திருவள்ளூர் பகுதியில் கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையில் கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதி, கிருஷ்ணா கால்வாய் நீர் மற்றும் ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் போன்றவைகளால் 42 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரித்துள்ளது.  எனவே வெள்ளிக்கிழமை 3 மணி நிலவரப்படி 32.50 அடி உயரமும், 2,380 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. எனவே அணைக்கான நீர்வர்தது அதிகரித்து வருவதால் அணையின் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு கருதி 30 ஆயிரம் கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் கொசஸ்தலை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆற்று வழித்தடங்களில் கரையோரம் இருபுறமும் தாழ்வான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், புழல் ஏரியில் 2,657 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 1864 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறறது. சோழவரம் ஏரியில் 793 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 215 கன அடி உபரி நீரும், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகையில் 500 மில்லியன் கன அடி நீர் உள்ள நிலையில், 230 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை அளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு, ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: பள்ளிப்பட்டு-119, சோழவரம்-104, திருத்தணி-98, ஆவடி-94, பூண்டி -78, திருவள்ளூர்-75, ஊத்துக்கோட்டை-73, ஆர்.கே.பேட்டை-71, தாமரைப்பாக்கம்-68, திருவாலங்காடு-59, செங்குன்றம்-52, பொன்னேரி-42, ஜமீன்கொரட்டூர்-43, பொன்னேரி-42, கும்மிடிப்பூண்டி-40.50, பூந்தமல்லி-35 என மொத்தம் 1051 மி.மீ, சராசரியாக 70.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில் பள்ளிப்பட்டு பகுதியில் 119 மி.மீ, சோழவரம்-104 என அதிகமாகவும், பூந்தமல்லியில் 35 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.