திருவள்ளூர்: ஸ்ரீ வீரராகவ பெருமாள்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாள் தோறும் இருவேலைகளில் வெவ்வேறு வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாளான தேரோட்ட நிகழ்வு வியாழக்கிழமை கோலகாலமாக நடைபெற்றது. இதையொட்டி தேரடியில் காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதராய் உற்சவர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. இத்தேர் குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வீரராகவ பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்த தேரோட்டத்தை முன்னிட்டு திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் பத்மஸ்ரீ பபி, நடராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர், பொதுப்பணித் துறை அலுவலர்களும் தயாராக இருந்தனர்.
அதற்கு முன்னதாக அதிகாலை 5.30 முதல் 11 மணி வரையில் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டிருந்தது. இந்த திருத்தேர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் கெளரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.