திருவள்ளூர் அருகே அடுத்தடுத்த 3 கோயில்களில் பூட்டுகள் உடைப்பு: 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் உண்டியல் பணம் திருட்டு

திருவள்ளூர் அருகே அடுத்தடுத்த 3 கோயில்களில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே அடுத்தடுத்த 3 கோயில்களில் பூட்டுகள் உடைப்பு: 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் உண்டியல் பணம் திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அடுத்தடுத்த 3 கோயில்களில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள கிழ் விளாகம் தெருவில் உள்ளது ஸ்ரீகடும்பாடி அம்மன் கோயில். இக்கோயிலின் பூசாரியாக சேகர் இருந்து வருகிறார். எனவே இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை கோயில் பூஜை முடிந்ததும் பூட்டிவிட்டு சென்றாராம்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் கோயிலை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகை மற்றும் உண்டியல் உடைத்து காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அதேபோல் நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள செல்லாத்தம்மன் கோயிலின் பூட்டையும் உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகை மற்றும் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூ.1.50 லட்சமும், அதே ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலின் பூட்டையும் உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகை மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ரூ.1.50 லட்சம் ஆகியவைகளையும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இந்த 3 கோயில்களுக்கும் சேகர் என்பவரே பூஜாரியாக இருந்து நிர்வாகம் செய்து வருகிறார். இந்த கோயில்களில் ஆண்டுதோறும் ஒரு முறை மட்டுமே உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு அப்பணம் திருவிழாக்கள் மற்றும் திருப்பணிகள் நடத்த பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் பூசாரி சேகர் புகார் செய்தார். 

அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கோயில்களில் நகை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோயில்களின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் உண்டியல் பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com