திருவள்ளூர் அருகே ரயில் நிலையத்தில் தனியாக அழுது தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தையை ரயில்வே போலீஸார் மீட்டனர்.
திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 2-இல் ஒன்றரை வயது பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையையும் பெற்றோர் விட்டுச் சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனியாக அழுது கொண்டிருந்தார்களாம். இதைப் பார்த்த பயணிகள் திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர் பொற்செல்வி, காவலர் தினேஷ்குமார் ஆகியோர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் சென்று அங்கு அழுது தவித்துக் கொண்டிருந்த 2 குழந்தைகளையும் மீட்டனர். இந்தக் குழந்தைகளை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றவர்கள் யார் என்பது தெரியவில்லை.
எனவே தெரியாமல் தவற விட்டார்களா, வளர்க்க முடியாமல் விட்டுச் சென்றார்களா என்பது குறித்து இருப்பு பாதை போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தைகள் காணாமல் போனதாக எந்த புகாரும் இல்லாததால் மீட்கப்பட்ட 2 குழந்தைகளையும், திருவள்ளூர் அருகே பாக்கம் கிராமத்தில் உள்ள சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக போலீஸார் தெரிவித்தனர்.