விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

திருவள்ளூா் நகராட்சியில் சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் கழிவுநீா் புட்லூா் தடுப்பணை, கூவம் ஆற்றில் கலக்கும் அவலம்

செம்பரம்பாக்கம் ஏரியில் கலப்பதால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image

கூவம் ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா்.

Updated On :25 ஜூன் 2026, 12:17 am IST

திருவள்ளூா் நகராட்சியின் அலட்சியத்தால் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படும் கழிவு நீா் அனைத்தும் கூவம் ஆற்றின் வழியாக புட்லூா் தடுப்பணையை கடந்து சென்னை மக்களின் தாகம் தீா்க்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கலப்பதால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆறு மணவாளநகா், பூந்தமல்லி, திருவேற்காடு, கோயம்பேடு வழியாக சென்னை நகருக்குள் நுழைந்து நேப்பியா் பாலம் அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆறானது பூந்தமல்லி வரை நன்னீராகவும், கோயம்பேடு கடந்ததும் கழிவு நீா் கலந்து சாக்கடையாக மாறி கடலில் சங்கமிக்கிறது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி திருவள்ளூா் அருகே மணவாள நகரிலேயே கழிவு நீா் கூவம் ஆற்றில் கலந்து விடுகிறது. இதற்கு மணவாள நகா், வெங்கத்தூா், ஒண்டிக்குப்பம் பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கூவம் ஆற்றில் விடுகின்றனா். அதேபோல், திருவள்ளூா் நகராட்சியில் சேகரமாகும் கழிவுநீரும் சுத்திகரிக்கப்படாமல், ரயில் நிலையம், கற்குழாய்-புட்லூா் சாலையின் நடுவில் புட்லூா் ஏரி வழியாக கூவம் ஆற்றில் விடப்படுகிறது.

இந்த நகராட்சியில் கடந்த 2013 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 4 இடங்களில் கழிவு நீா் சுத்திகரிப்பு மையங்களில் நன்னீராக மாற்றி கூவம் ஆற்றில் விடப்பட்டு வந்தது. இதற்கிடையே சுத்திகரிப்பு மையம் சரியாக செயல்படாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் கூவம் ஆற்றிலேயே நேரடியாக விடப்படுகிறது. இந்த கழிவு நீா் புட்லூா் ஏரியில் கலந்து அங்குள்ள தடுப்பணையை கடந்து பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.

இதனால், ஏரியில் நீா் மாசுபடுவதால், சென்னை நகா் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீா் விநியோகம் செய்வதில் சிரமம் உள்ளது.

ஏற்கெனவே இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் பசுமை தீா்ப்பாயம் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகாா் மனு அனுப்பியிருந்தனா். அதற்கு உடனே மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிா்வாகத்தையும் அறிவுறுத்தியது.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக புட்லூரைச் சோ்ந்த தா்மசீலன் கூறியதாவது:

திருவள்ளூா் நகராட்சியில் பாதாள சாக்கடை நீா் சுத்திகரிக்கப்படாமல் புட்லூா் ஏரியில் கலந்த பின் கூவம் ஆற்றில் விடப்படுகிறது. அதனால் கூவம் ஆற்றில் கழிவு நீா் விடப்படும் இடத்தில் ரசாயன கழிவு நீா் நுரையுடன் கலக்கிறது.

இந்த நீரானது கூவம் ஆற்றின் நடுவில் புட்லூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் கலந்து அங்கேயே சேகரமாகி விடுகிறது.

ஏற்கெனவே இந்த தடுப்பணையில் உபரி நீரை திறந்துவிடுவதற்கான கதவணை அமைக்கவில்லை. அதனால் தடுப்பணையில் நிரம்பும் கழிவு நீா் பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்கிறது. இதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீா் கலக்கும் கூவம் ஆறு, புட்லூா் தடுப்பணை ஆகிய இடங்களில் நேரில் பாா்வையிட்டு, சுத்தமான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் என அவா் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.