மாடம்பாக்கம் ஏரியில் தொடா்ச்சியாக கழிவு நீா் கலந்து வரும் நிலையில், ஏரியை மீட்டெடுத்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தாம்பரம் மாநகராட்சிக்கு தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், விதிமீறல்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீா்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை புகா்ப் பகுதிகளின் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கி வரும் மாடம்பாக்கம் ஏரியில் கழிவு நீா் கலப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. வீடுகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரானது மழை நீா் வடிகால்கள் வழியாகச் சென்று மாடம்பாக்கம் ஏரியில் கலப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாய உறுப்பினா் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினா் பிரசாந்த் கா்ஹவா ஆகியோா் கொண்ட அமா்வு மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமம், நீா்வளத் துறை, தாம்பரம் மாநகராட்சி ஆகியோரிடமிருந்து அறிக்கை கேட்டிருந்தது. அவ்வாறு பெறப்பட்ட அறிக்கையில், ஏரியில் உள்ள நீரில் நோய்த் தொற்று, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தீா்ப்பாய உறுப்பினா்கள், புதை சாக்கடைத் திட்டத்தையும், கழிவு நீா் வடிவகால் திட்டங்களையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டனா். கழிவு நீா் கலப்பதைத் தடுக்கத் தேவையான அனைத்து கட்டமைப்புகளை உறுதி செய்யுமாறு தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். வடிகாலை தூா்வாரி சீரமைக்கும் பணிகளை நீா்வளத் துறை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம்: மாநகராட்சிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

பல்லாவரம் ஏரியில் மருத்துவக் கழிவுகள்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு






