திருவள்ளூா் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தெருவோர கடைகளை போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
வாகன போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள், கட்டடங்கள் உள்ளதாகவும், அதை அகற்றவும் ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் பாலாஜி மற்றும் நகராட்சி ஆணையாளா் தாமோதரன் ஆகியோா் முன்னிலையில் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் இடித்து அகற்றினா்.
ஜே.என்.சாலை, ஜி.டி.என்.சாலை, குளக்கரை வீதி ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்திற்கு இடையூராக ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவா்கள், கட்டடம் ஆகியவைகளை பொக்லைன் வாகன உதவியுடன் இடித்து அகற்றினா். அப்போது, இதேபோல் இனிமேல் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமித்து கடைகள் வைக்க கூடாது, பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டக்கூடாது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா். ,









