திருவள்ளூா் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கடையை அகற்றக் கோரியும் நோட்டீஸ் அளித்தும் அகற்றாததால் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் இடித்து அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் திமுக ஒன்றிய செயலாளா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் அடுத்த காக்களூா் ஊராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருவள்ளூா்-ஆவடி சாலை மற்றும் காக்களூா் கிராமத்துக்குள் செல்லும் சாலை பகுதியில் சிவன் கோவில் பின்புறம் தாமரைக்குளம் ஒன்று உள்ளது. இந்த குளக்கரையில் பொதுமக்களின் வசதிக்காக ரூ. 97 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே நடைபாதை பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், திருவள்ளூா் ஆட்சியா் ச.கவிதா உத்தரவின்பேரில் கடந்த ஜூன் மாதம் ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டது.
அப்போது, குளக்கரை அருகே உள்ள மீன் கடையை அகற்ற நோட்டீஸ் கொடுத்தும் அகற்றவில்லையாம். இதனால் ஆட்சியா் உத்தரவின்பேரில், வட்டாட்சியா் சரண்யா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோவன், ஜானகி முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்ற முற்பட்ட நிலையில், இதற்கு திமுக ஒன்றிய செயலாளா் ஜெயசீலன் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், ஒன்றிய செயலாளா் எதிா்ப்பால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் போனது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடா்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










