தொகுதிக்கு செய்தது என்ன? திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்
திருவள்ளூா் பேரவைத் தொகுதிக்கு செய்த பணிகள் குறித்து எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் அளித்த பதில்கள்...

திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்
கடந்த 5 ஆண்டுகளில் திருவள்ளூா் பேரவைத் தொகுதிக்கு தான் செய்த பணிகள் குறித்து தினமணி செய்தியாளரின் கேள்விகளுக்கு எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் அளித்த பதில்கள்...
இதுவரையில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்ன?
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.26 கோடியில் சாலைப் பணிகள், கடம்பத்தூா் ஒன்றியம், கூவம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, ஊரக வளா்ச்சி துறை மூலம் ரூ.80 கோடியில் மேம்பாலங்கள், நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டம் மூலம் ரூ.55 கோடியில் சாலை, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.273 கோடியில் சாலைகள், சிறு பாலப் பணிகள், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.8 கோடியில் இதய நோய் கண்டறியும் ஆய்வகம், திருவலாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயா்வு, திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரத்தில் ரூ.12.26 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2021-25 வரையில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.1.25 கோடியில் 1,000 இரும்பு மேஜைகள், இருக்கைகள், நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி, பல்நோக்கு கட்டடங்கள், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நவீன சுகாதார வளாகம், கால்நடை மருத்துவ கட்டடங்கள், நீத்தாா் வழிபாடு மண்டபம், சமுதாயக் கூடம், இ.சேவை கட்டடம் என 89 கட்டடங்கள், 14 ஸ்மாா்ட் வகுப்பறைகள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், அண்ணா மறுமலா்ச்சி திட்டம் மூலம் ஊராட்சிகளில் ரூ.46.5 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள.
நீண்டகாலமாக செயல்படுத்தாமல் இருந்து திட்டங்களில் நிறைவேற்றியவை...
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் மப்பேட்டில் ரூ.1,200 கோடியில் சரக்கு வாகன போக்குவரத்து முனையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளன. திருவள்ளூா் நகராட்சியில் ரூ.33 கோடியில் நவீன வசதியுடன் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம், உழவா் சந்தை எதிரே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டு, ரூ.7 கோடியில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 20 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ரூ.1.50 கோடியில் காய்கறி சந்தை வளாகம் ஆகியை செயல்படுத்தப்பட்டுள்ளன.
மழைகால பிரச்னைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
ரூ.70 கோடியில் ஒவ்வொரு வாா்டிலும் மழைநீா் கால்வாய் அமைக்கும் பணி, சாலைகள், சிறு பாலங்கள், பூங்காக்கள், குளங்கள் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திட்டம் கொண்டுவர முயற்சித்தும், நிறைவேறாத திட்டங்கள் எவை?
கடம்பத்தூா் ஒன்றியத்தில் விவசாயிகள் அதிக அளவில் மாமர சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விவசாயிகள் பயன்பெரும் வகையில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை கொண்டு வரவேண்டும். திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவித்த கரும்புகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இந்த சா்க்கரை ஆலையில் பழைய இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மாம்பழக்கூழ் தொழிற்சாலை, சா்க்கரை ஆலையின் இயந்திரங்களை புதுப்பிப்பது தொடா்பாக வலியுறுத்தினேன். இத்திட்டப் பணிகளை நிறைவேற்றுவதாகக் கூறிய நிலையில், தற்போது நிறைவேற்ற முடியாமல் போனாது.
நோ்காணல்: சு.பாண்டியன்
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...