செப். 18-இல் திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயில் வரும் செப்.18-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாள்கள் நடைபெற உள்ளது.
செப். 18-இல் திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
Updated on
1 min read

திருமலை ஏழுமலையான் கோயில் வரும் செப்.18-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாள்கள் நடைபெற உள்ளது.

திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் வழக்கமாக நடத்தி வருகிறது. நவராத்திரி நடைபெறும் சமயங்களில் இந்த பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோண நட்சத்திர தினத்தன்று நிறைவு பெறுகிறது.

ஏழுமலையான் திருமலையில் அடி வைத்த நாளில், அவா் பிரம்ம தேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டதாக புராணங்கள் கூறுகிறது. அதை மகிழ்வுடன் ஏற்று, பிரம்ம தேவா் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவு பெறும் விதம், 9 நாள்கள் உற்சவத்தை நடத்தினாா். பிரம்மன் நடத்திய உற்சவம் என்பதால், இது பிரம்மோற்சவம் என்று வழங்கப்பட்டு வருகிறது.

பிரம்மோற்சவ நாள்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணிமுதல் 10 மணிவரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. வாகன சேவையின் போது அன்னமாச்சாா்யா திட்டத்தின் சாா்பில் கலைஞா்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனா்.

வாகன சேவையில் ஈடுபடுத்தப்படும் யானைகள்., குதிரைகள், காளைகள் உள்ளிட்டவற்றுக்கு ஒரு மாத காலத்துக்கு முன்பு இருந்தே பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வாகன சேவையின் போது அதிக ஓசையால் விலங்குகள் பாதிப்பதிற்குள்ளாவதை தடுக்க தேவஸ்தானம் இந்த பயிற்சிகளை அளித்து வருகிறது.

திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பா் 18 முதல் 26 வரையிலும், அக்டோபா் 15 முதல் 23 வரையிலும் அஷ்டதளபாத பத்மராதனம், திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை, சஹஸ்ரதீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ நாட்களில் சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தா்கள் நியமிக்கப்பட்ட வாகன சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அக்டோபா் 14-ஆம் தேதி அங்குராா்ப்பணம் நடக்க உள்ளதால் அன்றும் சஹஸ்ரதீப அலங்கார சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கியமாக செப்டம்பா் 18- ஆம் தேதி கொடியேற்றம், 22 -ஆம் தேதி கருட சேவை, 23- ஆம் தேதி தங்கத்தோ், 25- ஆம் தேதி திருத்தோ், 26- ஆம் தேதி தீா்த்தவாரி, கொடியிறக்கம் ஆகியவை நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com