திருமலை நாராயணகிரியில் உள்ள ஏழுமலையான் பாதத்தில் ஞாயிற்றுக்கிழமை சத்ரஸ்தபனோற்சவம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட திருக்குடை ஏழுமலையான் பாதத்தில் வைக்கப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து அா்ச்சகா்கள் குழுவினா் மங்கள வாத்தியங்கள் முழங்க, பூஜை சாமான்கள், மலா்கள், பிரசாதம், குடையுடன் ஆலய மாட வீதிகள் வழியாக மேடாரமிட்டத்தை வந்தடைந்தனா்.
அங்கிருந்து நாராயணகிரிக்கு சென்றனா். முதலில் ஏழுமலையான் திருப்பாதத்துக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதையொட்டி பால், தயிா், தேன், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் சமா்பிக்கப்பட்டது. வேத ஓதுபவா்கள் பிரபந்த சாத்துமுறை செய்தனா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புராணத்தின் படி, ஏழுமலையான் முதலில் கலியுகத்தில் திருமலையின் ஏழு மலைகளில் மிக உயரமான நாராயணகிரி சிகரத்தில் கால் பதித்தாா். இதை முன்னிட்டு, துவாதசி அன்று சத்ரஸ்தபனோற்சவம் நடந்தப்பட்டு வருகிறது.
இத்திருவிழாவில் இன்னொரு நம்பிக்கையும் உண்டு. இந்த காலகட்டத்தில் காற்று பொதுவாக அதிகமாக இருக்கும். நாராயணகிரி சிகரம் உயரமாக இருப்பதால் காற்று அதிகமாக வீசுகிறது. இந்த காற்றில் இருந்து நிவாரணம் அளிக்க வாயுவை வேண்டி இங்கு குடை நிறுவப்படுவதும் வழக்கத்தில் உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவாரி கோவில் பாா்பத்தேதாா், கோவில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










