மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரசு மருத்துவமனையில் பெண் சாவு: நாம் தமிழர் கட்சியினர் தர்னா

சாலை விபத்தில் காயமடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 2:09 am

சாலை விபத்தில் காயமடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். சிகிச்சை அளிக்க தாமதமானதால் அந்தப் பெண் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் மருத்துவமனை முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெரவளூரைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி சரஸ்வதி (57). இவர்களது மருமகன் வெங்கட். இவர்கள் 3 பேரும் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெங்கட் இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் மழையூர் அருகே சென்றபோது, வாகனம் நிலைதடுமாறி கீழே சாய்ந்ததில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சரஸ்வதி உயிரிழந்தார்.
சிகிச்சை அளிக்க தாமதமானதால் சரஸ்வதி உயிரிழந்ததாக புகார் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் அரசு மருத்துவமனை பிரதான வாயில் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
வந்தவாசி அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், உடனடியாக தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுகின்றனர்.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதிக்கும் உரிய சிகிச்சை அளிக்காமல் தீவிர சிகிச்சைக்கு பரிந்துரை செய்துவிட்டனர். 
உடனடியாக அவசர ஊர்தி வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை. தனியார் அவசர ஊர்தியில் கொண்டு செல்லும்படி மருத்துவமனை ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்தனர். இதனாலேயே சரஸ்வதி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, அவரது உயிரிழப்புக்கு காரணமாக மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே, அங்கு வந்த வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், நாம் தமிழர் கட்சியினர் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.