அரிசி ஆலைகளின் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

ஆரணி அரிசி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் (ஊறல் தண்ணீர்) குடியிருப்புப் பகுதியில் தேங்குவதால் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளது

ஆரணி அரிசி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் (ஊறல் தண்ணீர்) குடியிருப்புப் பகுதியில் தேங்குவதால் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளது. மேலும், ஆலைகளில் இருந்து வெளியேறும் உமி, தவிடு காற்றில் பறப்பதால் பொதுமக்கள் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, களம்பூர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு அரைவை செய்யப்படும் அரிசி சென்னை, வேலூர், பெங்களூரு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 இங்கு இயங்கும் அரிசி ஆலைகளில் இருந்து நெல் ஊறல் தண்ணீர் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது. துர்நாற்றம் வீசும் இக்கழிவு நீரை சில ஆலைகள் சுத்திகரித்து முறைப்படி வெளியேற்றுகின்றன. சில ஆலைகள் சுத்திகரிக்காமல் நள்ளிரவில் வெளியேற்றுகின்றன.
 வெளியேற்றப்படும் கழிவுநீர் ஒட்டுமொத்தமாக குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் அவதிப்படுகின்றனர்.
 ஆரணி இ.பி.நகர் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும், ஆலைகளில் இருந்து வெளியேறும் சாம்பல் துகள்களும் குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது.
 காற்றில் சாம்பல் பரவுவதைத் தடுக்க, ஆலையில் போதுமான சாம்பல் வடிகட்டிகள் பொருத்தப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 அரிசி அவியல் மற்றும் அரைவை ஆலைகள் இயங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். இடையில் விதிமுறை மாற்றம் இருப்பின் அதையும் ஆலைகள் நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற 35 நிபந்தனைகள் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் விதிக்கப்பட்டுள்ளன.
 இவை அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே ஆலையை இயக்க அனுமதி கிடைக்கும். ஆனால், ஆரணி பகுதியில் பல அரிசி ஆலைகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் சாம்பல் வெளியேறுகிறது.
 30-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன. இதனால், காற்று மண்டலம் மாசடைகிறது. அருகில் குடியிருப்போருக்கு சுவாசக் கோளாறுகள், தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. சாம்பல் துகள்கள் காற்றில் பரவி கண்களில் விழுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
 எனவே, சாம்பல் துகள்கள் காற்றில் பரவுவதைத் தடுக்க வேண்டும். ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை அப்புறப்படுத்தி, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
 இதுகுறித்து மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சுஹாசினி கூறியதாவது:
 அரிசி ஆலை நிர்வாகத்தினர் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் மூலம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று வருகின்றனர். அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார் அவர்.
 இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:
 நெல், அரிசி ஆலை உரிமையாளர்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாமலேயே சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள்.
 அரிசி ஆலைகளில் முறையாக சுத்திகரிப்பு செய்து கழிவுநீரை வெளியேற்றுகிறார்களா என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதாகத் தெரியவில்லை என்றனர் அவர்கள்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com