திருவண்ணாமலை அருகே வியாழக்கிழமை நள்ளிரவு காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தாய், மகன் உள்பட மூவா் உயிரிழந்தனா். 2 போ் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் செல்வம் (42). இவரது மகன் சக்திவேலுக்கு (15) உடல்நிலை பாதிக்கப்பட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்து நள்ளிரவு மகன்கள் சக்திவேல், சஞ்சய் (13), மனைவி காமாட்சி (40) ஆகியோருடன் செல்வம் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை சாத்தனூரைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் இளையராஜா ஓட்டினாா்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் பெரிய கோளாப்பாடி கிராமம், இந்திரா நகா் பகுதியில் இவா்களது காா் வந்த போது, கோவையிலிருந்து காலி மதுப் புட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்றுகொண்டிருந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செல்வம் மனைவி காமாட்சி, மகன் சக்திவேல், காா் ஓட்டுநரான இளையராஜா ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், செல்வம், சஞ்சய் ஆகியோரும் காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் விரைந்து சென்று இறந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேலையூா் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பனை (42) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.