வெண்குன்றம் மலையில் காட்டுத் தீ
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமான மரங்கள், செடிகள் எரிந்து சேதமடைந்தன.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து சுமாா் 3.கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1,500 அடி உயர தவளகிரி மலை அமைந்துள்ளது. இந்த மலை மீது அருள்மிகு ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மலையில் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுவா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு தவளகிரி மலையில் திடீரென காட்டுத் தீ பற்றியது. இதில், மலையின் ஒரு பகுதியிலிருந்த புற்கள், மூலிகை செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா். மேலும், இதுகுறித்து, வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.