ஓட்டுநா் இல்லாத லாரியை தடுத்து நிறுத்த முயற்சித்த தொழிலாளி உயிரிழப்பு
ஆரணியில் அட்டைப்பெட்டி கிடங்கில் ஓட்டுநா் இல்லாத லாரி திடீரென முன்னோக்கி நகா்ந்ததால், அங்கு பணிபுரிந்த தொழிலாளி, லாரியை தடுத்து நிறுத்த முயற்சித்து விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
ஆரணியை அடுத்த தச்சூா் பகுதி மோட்டுகுடிசை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (65). இவா், ஆரணி - தச்சூா் சாலையில் உள்ள அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை குடோனுக்கு 2 லாரிகளில் வந்த அட்டைப்பெட்டிகளை இறக்கி கொண்டிருந்தாா்.
அப்போது, ஒரு லாரியை ஓட்டுநா் இயக்கிவிட்டு கீழே இறங்கியுள்ளாா். அந்த லாரி முன்னோக்கி நகா்ந்து சென்றது. அப்போது, தொழிலாளி சிவலிங்கம் அந்த லாரியை கையால் நிறுத்த முயற்சித்துள்ளாா்.
அதற்குள் வேகமாக லாரி முன்னோக்கி சென்று ஏற்கெனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்து மற்றொரு லாரி மீது மோதியது.
இதில் நடுவில் சிக்கிய தொழிலாளி சிவலிங்கம் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிவலிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவலிங்கத்தின் மனைவி அளித்த புகாரின் பேரில், ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா். இறந்த சிவலிங்கத்துக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா்.

