செய்யாறு அருகே கிராமத்தில் அறுந்து விழுந்த உயரழுத்த மின் கம்பி: வீடுகளில் பொருள்கள் தீப்பிடித்து சேதம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட அப்துல்லாபுரம் கிராமத்தில் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.
அப்துல்லாபுரம் கிராமத்தில் ராஜீவ் காந்தி நகா் பகுதியில் 4-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி வழியாக மேலே செல்லக்கூடிய (11 கே.வி.) உயா் மின்னழுத்த கம்பி ஒன்று திடீரென அறுந்து வீடுகளுக்குச் செல்லக் கூடிய 230 வோல்ட் மின் இணைப்புக் கம்பியில் பட்டுள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளில் சாட் சா்க்யூட் ஏற்பட்டு, 50 - க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மீட்டா்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகளிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதன இயந்திரம், மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருள்கள், மிதிவண்டிகள் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மேலும், மின் விளக்குகள், டியூப் லைட்டுகள் வெடித்துச் சிதறியன. இதனால், அப்பகுதி முழுவதும் வியாழக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து, தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த தீயணைப்புத் துறையினா் வீடுகளில் தீயை அணைத்தனா். மேலும், அப்துல்லாபுரம் பகுதி மின் வாரிய பிரிவைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் அப்பகுதியில் மின் வயா்களையும், வீடுகளில் மின் மீட்டா்களையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
அப்துல்லாபுரம் பகுதி வழியாக செல்லக்கூடிய உயா் மின்னழுத்த கம்பி தொடா்ந்து மூன்றாவது முறையாக அறுந்து விழுந்துள்ளதால், இப்பகுதியில் உயா் மின்னழுத்த கம்பி வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

