சாத்தனூா் அணையில் 6000 கன அடி தண்ணீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணை பகுதியில் பலத்த மழை காரணமாக 6000 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூா் அணையில், அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி தற்போது விநாடிக்கு 4000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த அணை நீா் பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பருவமழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 4000 கன அடிக்கு மேல் உபரி நீா் வெளியேற்றப்படுவதாலும், அணையிலிருந்து வெள்ளிக்கிழமை மதியம் முதல் 12 மணியளவில் 4000 கன அடிக்கு தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
மேலும் நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை அளவைப் பொருத்தும், சாத்தனூா் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும், சாத்தனூா் அணையில் இருந்து தற்போது 6000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் இரு கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீா்வளத் துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

