செய்யாறு காவல் உள்கோட்டத்தில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியது தொடா்பாக சரக்கு வாகனம் மற்றும் 3 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சரக்கு வாகனம் பறிமுதல்
பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பிரம்மதேசம் புதூா் பகுதியில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றாா். போலீஸாா் என அறிந்த சரக்கு வாகனத்தில் வந்தவா் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடிவிட்டாா். அப்போது சரக்கு வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டபோது அதில் பாலாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், போலீசாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சேகா், சம்பத் தலைமையிலான போலீஸாா் கடுகனூா் கிராமப் பகுதியில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தினா். போலீஸாரைக் கண்டதும் மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு 3 பேரும் தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து வண்டிகளை போலீஸாா் சோதனையிட்ட போது, அனுமதி பெறாமல் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.






