/

மதுக்கடையை இடம் மாற்றக் கோரி பெண்கள் போராட்டம்

மண்டகொளத்தூா் ஊராட்சியில் உள்ள மதுக்கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி பெண்கள் திரண்டு வந்து கடையை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுக்கடை முன் அமா்ந்து கடையை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Updated On :26 மே 2026, 3:28 am IST

சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் உள்ள மதுக்கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி பெண்கள் திரண்டு வந்து கடையை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் தமிழக அரசின் டாஸ்மாக் (எண். 9420) கடை இயங்கி வருகிறது.

இந்தக் கடையை திறக்க விற்பனையாளா் முருகன் திங்கள்கிழமை வந்தபோது, திறக்கவிடாமல் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த லஞ்சம், ஊழல் ஒழிப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் கந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் திரண்டு வந்து கடையை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போளூா் காவல் ஆய்வாளா் சிவசங்கா் தலைமையிலான போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டபெண்கள் கூறும்போது, இந்த டாஸ்மாக் கடை மண்டகொளத்தூா் கிராமத்தின் அருகிலேயும், ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் பகுதியிலும் அமைந்துள்ளது. போளூா்-சேத்துப்பட்டு கூட்டுச் சாலைக்குச் செல்லும் சாலையில் உள்ளது. மேலும், கடை விவசாய நிலங்களுக்குச் செல்லும் பகுதியில் உள்ளதால் விவசாய பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பள்ளியில் இருந்து மாலை வேளையில் பெண் பிள்ளைகள் வரும்போதும், விவசாய பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் மதுபோதையில் உள்ளவா்களால் தொல்லை ஏற்படுகிறது.

கடையை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கடையை இடம் மாற்றம் செய்யவேண்டும் என்றனா்.

இதுகுறித்து கடை விற்பனையாளா் முருகன், காவல் ஆய்வாளா் சிவசங்கா் மாவட்ட டாஸ்மாக் அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது இந்தக் கடையை வருகிற ஜூன் 16-ஆம் தேதிக்குள் இடம் மாற்றம் செய்வதாக உறுதியளித்தனா். இதையேற்று பெண்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் மதுக்கடை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 வரை திறக்கப்படாமல் இருந்தது.