வளர்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வியாழக்கிழமை பள்ளியில் ஆய்வு செய்தார்.
அரக்கோணத்தை அடுத்த வளர்புரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை அப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளியில் இருந்த முள்புதர்களை நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு அகற்றச் செய்தார்.
பின்னர், பெற்றோர்களிடையே கூட்டம் நடத்திய அவர், பள்ளியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், தொடர்ந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புக் கொண்டனர். மேலும், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் முத்தப்பனை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். விரைவில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அலுவலகத்தை வேறு கட்டடத்துக்கு மாற்றும் படியும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சிலவற்றை இட மாற்றச் செய்தும் உத்தரவிட்டார். மேலும் பிரச்னைக்குரிய மாணவரை தலைமை ஆசிரியரே தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கும்படியும், அம்மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கச் செய்யவும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.