
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவராக 2-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்ட த.வேலழகன், புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டில் 806 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை 17 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 806 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, தலா 11 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டனர். இந்த சங்கங்களின் பிரதிநிதிகள் மூலம் 17 தொகுதிகளுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்றது.
இதில், த.வேலழகன், வி.விஜயகுமார், வி.சுந்தரமூர்த்தி, வி.கிருஷ்ணன், எஸ்.தட்சிணாமூர்த்தி, சி.அருண், எஸ்.எழிலரசி, எஸ்.மேகலா, ஆர்.செல்வி, கே.விஜயலட்சுமி, ஆர்.விஜயலட்சுமி, என்.கஜேந்திரன், பி.பாபு, கே.வி.புஷ்பலிங்கம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஆவின் நிர்வாகக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வேலூர் ஆவின் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ஆவின் தலைவராக அணைக்கட்டு ஒன்றிய அதிமுக செயலர் த.வேலழகன் 2-ஆவது முறையாகவும், துணைத் தலைவராக பி.பாபு ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் பொறுப் பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி உள்ளிட்ட அதிமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆவின் நிர்வாகக் குழுத் தலைவர் த.வேலழகன் கூறியது:
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் பால் விநியோகம் செய்து வருகின்றனர். இவர்கள் மூலம் ஆவினுக்கு நாளொன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மேலும் உயர்த்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது இரு மாவட்டங்களிலும் 35 பால் குளிரூட்டு நிலையங்கள் உள்ளன. அவற்றை மேலும் அதிகரிக்கவும், பால் உபபொருள்கள் தயாரிப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




