குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூர் ஊராட்சியில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிலக்கடலை, துவரை பயிரிடுவது குறித்து மானாவாரி விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விஆர்ஐ-8 எனும் நிலக்கடலை வல்லுநர் விதைகள், விபிஎன்-3 எனும் துவரை வல்லுநர் விதைகள் வேலூர் மாவட்டத்தில் ரூ. 1.12 கோடியில் முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வல்லுநர் விதைகளை முன்னோடி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அந்த சாகுபடியில் உற்பத்தியாகும் நிலக்கடலை, துவரை விதைகள் பயறு வகை பெருக்கத் திட்டத்தின் கீழ் மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும். முன்னோடி விவசாயிகள் பயிரிட்டுள்ள நவீன நிலக்கடலை, துவரை பயிர்களை தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட மாநில ஆலோசகர் கே. கோவிந்தன், மாவட்ட ஆலோசகர் ஆர். சந்திரசேகரன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மகேந்திரபிரதாப் தீட்சித் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், இத்திட்டம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ஆர் விஸ்வநாதன், வேளாண்மை அலுவலர் ஆர். உமாசங்கர், உதவி வேளாண்மை அலுவலர்கள் வி. ஜெயக்குமார், கே. சிவப்பிரகாசம் ஆகியோர் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர்.