பேர்ணாம்பட்டு அருகே வளர்ப்பு நாய்களைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பேர்ணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா, வனவர்கள் ஹரி, வேல்முருகன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் பல்லலகுப்பம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வளர்த்து வந்த 4 நாய்களைப் பயன்படுத்தி வனப்பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது.
அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், ஏரிகுத்தியைச் சேர்ந்த மணி (55), வெங்கடேசன் (35), கஜேந்திரன் (50), தேவராஜ் (55), முனியப்பன் (52) என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து 17 கிலோ மான் இறைச்சி கைப்பற்றப்பட்டது. அதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1 லட்சம் வசூலிக்கப்பட்டது.