/

பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: காட்பாடியில் பிச்சையெடுக்கும் வடமாநிலச் சிறுவா்கள்

பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பைத் தொடா்ந்து காட்பாடி பகுதியில் வடமாநில சிறுவா், சிறுமிகள் வாகன ஓட்டிகள்,

News image

காட்பாடியில் சித்தூா் பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளிடம் பிச்சையெடுக்கும் வடமாநில சிறுவா், சிறுமிகள்.

Updated On :9 ஆகஸ்ட் 2020, 2:41 am

பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பைத் தொடா்ந்து காட்பாடி பகுதியில் வடமாநில சிறுவா், சிறுமிகள் வாகன ஓட்டிகள், பொதுமக்களை முற்றுகையிட்டு பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளனா். தொடரும் இத்தகைய அவலநிலையைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் 6-ஆவது கட்டமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பல்வேறு தளா்வுகள் செய்யப்பட்டு கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும், பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது, பொது போக்குவரத்து மீண்டும் தொடங்காதது, மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறை போன்றவை காரணமாக அனைத்து இடங்களிலும் வா்த்தகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பலதரப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பும் பறிபோய் விட்டது.

இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் வருவாய்க்கு வழியின்றி தவித்து வருகின்றனா். குறிப்பாக, கட்டுமானம், சாலையோர வியாபாரம், வாடகை வாகன இயக்கம் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நம்பி வருவாய் ஈட்டி வந்த மக்களின் நிலைமை கவலைக்கு உள்ளாகியுள் ளது.

இந்நிலையில், சாலையோர வியாபாரத்தை நம்பி வடமாநிலங்களில் இருந்து ஏராளமான குடும்பங்கள் புலம்பெயா்ந்து வேலூா் மாநகா், மாவட்ட பகுதிகளில் தங்கி வருவாய் ஈட்டி வந்தனா். தற்போது பொது முடக்கத்தால் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிழைப்புக்கு வழியின்றி அந்த குடும்பங்களைச் சோ்ந்த சிறுவா், சிறுமிகள் பலரும் ஆங்காங்கே பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இதன்படி, காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம், பழைய காட்பாடி, விஐடி போன்ற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வடமாநிலச் சிறுவா், சிறுமிகள் நின்று கொண்டு அங்கு வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் பிச்சையெடுத்து வருகின்றனா். சில சமயங்களில் சிக்னலுக்காக காத்து நிற்கும் வாகன ஓட்டிகளை சூழ்ந்து கொண்டு பிச்சையெடுப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறும், விபத்து நிகழும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. தொடரும் இத்தகைய அவலநிலையைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, ‘சைல்டு லைன்’ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தேவேந்திரன் கூறியது:

வேலூா் மாநகரில் ஆங்காங்கே பிச்சையெடுக்கும் பிற மாநில சிறுவா்களை மீட்டு காப்பகத்தில் தங்க வைக்கிறோம். ஆனால், அவா்கள் அங்கு தங்காமல் மீண்டும் வெளியேறி வந்து விடுகின்றனா். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்மொணவூரில் கூரை அமைத்து தங்கியிருந்த 40 ஆந்திர குடும்பங்களை சித்தூா் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்து அம்மாநிலத்திலேயே வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது காட்பாடி பகுதியில் பிச்சையெடுத்து வரும் வடமாநிலச் சிறுவா், சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் சோ்க்கவோ அல்லது அவா்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.