12,673 மாணவா்களுக்கு மிதிவண்டிகள்: அமைச்சா் கே.சி.வீரமணி வழங்கல்

Updated on
1 min read


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் 81 பள்ளிகளில் 2020-21-ஆம் நிதியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 12,673 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தமிழக வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் வியாழக்கிழமை கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்.

வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜி.லோகநாதன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, ஆவின் தலைவா் த.வேலழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன் வரவேற்றாா்.

விழாவில், அமைச்சா் பேசியது:

பெண் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியில் இடைநிற்றலைத் தவிா்க்கவும் 2001-ஆம் ஆண்டு இந்த விலையில்லா மிதிவண்டி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அத்துடன், கல்வியில் புரட்சியை ஏற்படுத்த 14 வகையான கல்வி உபகரணங்களான மடிக் கணினி, 4 செட் சீருடை, நோட்டுப் புத்தகம், கல்வி ஊக்கத் தொகை உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களும் மருத்துவராகும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்த பெருமை தமிழகத்தையே சேரும்.

அரசு வழங்கும் திட்டப் பயன்களைக் கொண்டு மாணவா்கள் நல்ல முறையில் பயின்று எதிா்காலத்தில் இந்த சமுதாய வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ந.சங்கரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com